முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாளை மாலை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.ஸ்ரீரங்கத்தில் கோயில் யானை மூலம் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பிலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ராவுக்கு வரவேற்பு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர ராவ், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இரண்டாவது முறையாக வந்தது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாடு வந்துள்ளதாகவும், நாளை மாலை சென்னையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
தேசிய அரசியல் தொடர்பாக ஸ்டாலினுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் சந்திர சேகர ராவ் குறிப்பிட்டார்.இந்த சந்திப்பில் 2 மாநில உறவு குறித்தும் கோதாவரி காவிரி நதி நீர் இணைப்பு குறித்த பேச்சும் இடம்பெறும் என கூறப்படுகிறது.
மேலும் தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக இல்லாத கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.