”அனைவரும் ஒரு திருமணத்தையாவது உத்தரகண்ட் மாநிலத்தில் நடத்த வேண்டும்” - பிரதமர் மோடி

நாட்டில் உள்ள குடும்பங்கள் அனைத்தும் தங்கள் குடும்பத்தில் ஒரு திருமணத்தையாவது உத்தரகண்ட் மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அம்மாநில அரசு நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் அமைத்திருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

இதையும் படிக்க : ”ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

இதனைத் தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவில் தயாரிப்போம் இயக்கத்தைப் போல் இந்தியாவில் திருமணம் செய்வோம் என்ற இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று கூறினார். உத்தரகண்ட் மாநிலத்தை திருமணத் தலமாக மாற்ற அனைத்து குடும்பங்களிலும் ஒரு திருமணத்தையாவது உத்தரகண்ட் மாநிலத்தில் நடத்த முன்வர வேண்டும் என்று கூறினார்.

இலக்கு நோக்கி பயணிக்கும் இன்றைய இந்தியா, அரசியல் நிலையற்ற தன்மையை விரும்பவில்லை என்று மோடி தெரிவித்தார். வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சிக்கு உத்தரகண்ட் மாநிலம் ஒரு ஒளிமயமான எடுத்துக்காட்டு என்று பெருமிதம் தெரிவித்தார்.