குறைந்த வயதிலேயே ஓய்வை அறிவித்த குயிண்டன் டிகாக்..!

பிறக்கவிருக்கும் குழந்தையுடன் நேரம் செலவிட நினைப்பதாக டிகாக் விளக்கம்..!

குறைந்த வயதிலேயே ஓய்வை அறிவித்த குயிண்டன் டிகாக்..!

தென்னாப்பிரிக்க அணியின் மிக முக்கிய கிரிக்கெட் வீரரான குயிண்டன் டிகாக் திடீரென தனது ஓய்வை அறிவித்து 
அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ள 2வது மற்றும் 3வது டெஸ்ட் 
போட்டியில் இருந்து முதலில் விலகுவதாக இருந்த அவர், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள எண்ட் கார்டா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தனது ஓய்வு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் டிகாக். ஓய்வு முடிவை நான் எளிதாக எடுத்துவிடவில்லை. நீண்ட காலமாக யோசித்து, எதிர்காலத்தை மனதில் வைத்துதான் முடிவெடுத்தேன். எனக்கு முதலில் எனது குடும்பம் தான் முக்கியம். மனைவி ஷாஷா மற்றும் விரைவில் பிறக்கவிருக்கும் குழந்தைக்காகவும் இனி வரும் நாட்களை செலவிட நினைக்கிறேன்.

எனக்கு எனது குடும்பம் தான் எல்லாமே. எனவே அவர்களுக்காக நேரங்களை ஒதுக்கவும், மகிழ்ச்சியாக வாழவும் இருக்க இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன். இது கிரிக்கெட்டில் என்னுடைய முடிவு அல்ல. நான் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேன். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான குயிண்டன் டிகாக் இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 6 சதங்களுடன் 3,300 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர் குயிண்டன் டிகாக். 
குறைந்த வயதிலேயே தனது ஓய்வை அவர் அறிவித்திருப்பதால், ரசிகர்கள் சற்று அதிருப்தியடைந்துள்ளனர்.