இந்தியா VS ஆஸ்திரேலியா : 4-வது 20 ஓவர் போட்டியை வென்றது இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில்  20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில் 2 க்கு 1 என இந்திய அணி முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில் 4-வது போட்டி ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 37 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 35 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க : டிசம்பர் 4 -ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் ஆட்டமிழக்காமல் 36 ரன்களை எடுத்தார். இதையடுத்து இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

4வது இருபது ஓவர் போட்டியில் வெற்றிப் பெற்றதையடுத்து, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ளது.