மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகை...!

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகிறார்.

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீா்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகள் அருகே உள்ள பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணி கடந்த 6 நாட்களாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ரயில்கள், பேருந்துகளின் இயல்பான தினசரி சேவையை கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. மழைநீா் தேக்கத்தால் பல இடங்களில் மூடப்பட்டிருந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சுரங்கப்பாதைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

இந்நிலையில், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம், சென்னையின் மேற்கு மாம்பலம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.