ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள்: "குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்" வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள்: "குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்" வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஸ்ரீரங்கம் வேத பாடசாலை மாணவர்கள் மூன்று பேரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி, ஸ்ரீரங்கம் மேலவாசல் பட்டர்தோப்பு பகுதியில், 'ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம்' என்ற வேத பாடசாலை செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறையையொட்டி இங்கு நடக்கும் சிறப்பு வகுப்புகளில் 
50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வேத கல்வி பயின்று வருகின்றனர். இந்த குருகுலத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பது வழக்கம். அதுபோல, மே 14 ம் தேதி அதிகாலை
ஈரோடு, நசியனுாரைச் சேர்ந்த கோபலாகிருஷ்ணன் (17), திருவாரூர் மாவட்டம்,  மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் (13), ஹரிபிரசாத் (14), ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த வெங்கடகிரிதர் தாய்சூரிய அபிராம் (14) ஆகிய நான்கு பேர் கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர்.

பொதுவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்காது என்ற நம்பிக்கையில் தான் சிறுவர்கள் அங்கு குளித்துள்ளனர்.  கொள்ளிடத்தில்  திடீரென்று நீர் வரத்து அதிகரித்து குளித்துக் கொண்டிருந்த அந்த நான்கு சிறுவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் கோபாலகிருஷ்ணன் தவிர மற்ற மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இவர்களின் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்து பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், மூன்று சிறுவர்களின் உயிரிழப்புக்கு, எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதே காரணம் என குற்றம் சாட்டியுள்ள அவர் இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் இந்த பொறுப்பின்மைக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  மேலும், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து கொள்ளிடம் போன்ற ஆறுகளில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை பலகைகளையும் வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.