ஆறுகளை தூர்வார நிதி ஒதுக்கப்படவில்லை...! பிஆர்.பாண்டியன் குற்றசாட்டு...!!

ஆறுகளை தூர்வார நிதி ஒதுக்கப்படவில்லை...! பிஆர்.பாண்டியன் குற்றசாட்டு...!!

ஆறுகளை தூர்வாரவும், பாசன கட்டுமான பராமரிப்பிற்கும் தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
 
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணி ஆறு, கோரையாறு ஆகியவற்றில் புதர்கள் மண்டிகிடப்பதை நேரடியாக பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

"காவிரி டெல்டாவில் திருச்சி , தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வெள்ள நீர் ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து வரக்கூடிய கோரையாறு வழியாகத்தான் கடலுக்கு சென்றடைய முடியும். இந்த ஆற்று நீரை பயன்படுத்தி சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேல் சாகுபடி செய்யக்கூடிய நிலையும் இருக்கிறது. இந்த கோரையாறு மற்றும் அதன் கிளை ஆறுகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை.

ஆறுகள் புதர்மண்டி ஒட்டுமொத்தமாக நீரோட்டமே மாறிவிட்டது. கரைகளை விட ஆற்றினுடைய நடுப்பகுதி மேடாக வந்துவிட்டது. இதனால் பாசன காலங்களில் மிகப்பெரிய பாசன தட்டுப்பாடு ஏற்படுவதோடு பெரும் வெள்ள காலங்களில் கடலுக்கு வெள்ள நீரை கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பையும் இழந்துவிட்டது.

இந்நிலையில், டெல்டா மாவட்ட ஆறுகளை மறு சீரமைப்பு செய்வதற்காக ஆசிய வளர்ச்சி வங்கிகளின் மூலம் 2016 ஆம் ஆண்டு 960 கோடி ரூபாய் நிதியினை  வழங்க முன்வந்தது. இதில் முதல் கட்டமாக 542 கோடி ரூபாய்க்கு அரிச்சந்திரா ஆறு, அடப்பாறு, முள்ளியாறு உள்ளிட்ட ஆறுகள் தூர்வாரப்பட்டு முடிவடைந்துள்ளன. இதில் இரண்டாவது தவணையைப் பெற்று பாமணி ஆறு, கோரையாறு மற்றும் இதனை உள்ளடக்கிய கிளை ஆறுகள் தூர்வாரப்பட வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான நிதிகளை பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை.

இதனால் ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக கோரையாறு, பாமணி ஆறு மற்றும் அதனுடைய கிளை ஆறுகளை தூர் வாருவதற்கான ஆசிய வளர்ச்சி நிதி வங்கியினை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் பாசன கால்வாய் கட்டுமானங்கள், மதகுகள், சிறுபாசன மதகுகளை செப்பனிடப் படுவதற்கான நிதியை கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசு நிறுத்திவிட்டது. இதனால் ஒட்டுமொத்த கிராமப் பகுதிகளில் இருக்கின்ற பாசன மதகுகள் சீரழிந்து பாசனம் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எனவே இது குறித்து தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:தன்னையே கேலி செய்தாலும், மக்களை மகிழ்வித்த மனோபாலா...!!