முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோவை வெளியிட்ட ரஜினி!!!

2022 ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை  அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான வீடியோவை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோவை வெளியிட்ட ரஜினி!!!

சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன் முறையாக தமிழ்நாட்டில் அதுவும் சென்னை மாநகரில் நடைபெற இருக்கிறது. சுமார் 200 நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுடன் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான எதிராப்பார்ப்பு, மக்களிடையே அதிகரித்துள்ளது.

2021 ம் ஆண்டு நடக்க இருந்த இந்த போட்டியானது கொரோனா காரணமாக இணையவழியிலேயே நடைப்பெற்றது. அதில் இந்தியாவும், ரஷியாவும் கோப்பையைப் பகிர்ந்து கொண்ட நிலையில், 2022ம் ஆண்டின் சர்வதேச ஒலிம்பியாட் போட்டி, ரஷியாவில் நடக்க இருந்தது. ஆனால், அங்கு போர் நடந்து வரும் காரணத்தால், இந்தியாவில், அதும் தமிழ்நாட்டின் தலைநகரில் இந்த போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டில் நடக்க இருக்கும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வர உள்ள நிலையில், "செஸ் ஒலிம்பியாட் 2022" போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 'செஸ் தம்பி' என்ற இந்த சின்னம் தமிழக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. செஸ் விளையாட்டில் இருக்கும் குதிரை வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம் கூறி வரவேற்பதை போல அந்த சின்னம் அமைந்துள்ளது. இந்த சின்னத்தை பிரபலப்படுத்தி வருகிறது தமிழக அரசு. 

இதனைத் தொடர்ந்து, இந்த போட்டிக்கான ட்ரெயிலரை நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோன்றும் அந்த ட்ரெயிலர், பலரையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. “வெல்கம் டு நம்ம ஊரு சென்னை” என இருக்கும் இந்த பாடல், சென்னை மாநகரின் பிரசித்தியான நேப்பியர் பாலத்தை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

செஸ் போர்டைப் போலவே பெயிண்ட் செய்யப்பட்ட நேப்பியர் பாலத்தில் சதுரங்க காய்கள் போல, கருப்பு வெள்ளை ஆடை அணிந்து அந்த வீடியோவில் ஆடுவதைப் பார்க்க அழகாக இருக்கிறது.

சமீபத்தில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பிரம்மாண்டமான முறையில் வண்ண வண்ண உப்பில் வரைந்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.