செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பிரம்மாண்டமாக உப்பில் வரைந்து அசத்திய பள்ளி மாணவர்கள்...!

2022 ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை  அடுத்த மாமல்லபுரத்தில்  நடைபெறவிருக்கும் நிலையில், கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பிரம்மாண்டமான முறையில் வண்ண வண்ண உப்பில் வரைந்து அசத்தியுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பிரம்மாண்டமாக உப்பில் வரைந்து அசத்திய பள்ளி மாணவர்கள்...!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் 200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களுடன் நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021ம் ஆண்டுக்கான போட்டி இணைய வழியில் நடைபெற்றது. இதில் இந்தியாவும் ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்துகொண்டன. இந்த சூழ்நிலையில், 2022ம் ஆண்டுக்கான போட்டியை ரஷ்யாவில் போர் நடந்து வருவதன் காரணமாக அங்கு இந்த போட்டியை நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. 2022 ம் ஆண்டுக்கான 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். இந்த நிலையில் "செஸ் ஒலிம்பியாட் 2022" போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 'செஸ் தம்பி' என்ற இந்த சின்னம் தமிழக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.செஸ் விளையாட்டில் இருக்கும் குதிரை  வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம் கூறி வரவேற்பதை போல அந்த சின்னம் அமைந்துள்ளது.இந்த சின்னத்தை பிரபலப்படுத்தி வருகிறது தமிழக அரசு.

இந்நிலையில் அதனை கொண்டாடும் வகையில், கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பிரம்மாண்டமான முறையில் வண்ண வண்ண உப்பில் வரைந்து அசத்தியுள்ளனர். கோவை மணியகாரம்பாளையத்தில் அமைந்துள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள் செஸ் சின்னத்தை 40 அடி உயரம் 20 அடி அகலதில் வண்ண வண்ண உப்பை கொண்டு வரைந்துள்ளனர். 40 மாணவர்கள் இணைந்து 2 மணி நேரத்தில் இந்த சின்னத்தை வரைந்து அசத்தியுள்ளனர். தமிழகத்தில் சர்வதேச செஸ் போட்டி நடைபெறுவது பெருமையளிப்பதாகவும், இதுகுறித்து மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சின்னத்தை வரைந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.