சிலைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இச்சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

மேலும் தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உச்சநீதிமன்ற உத்தரவின்படி அகற்றவும்உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.  இந்த மனு  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், அதற்காக  அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு வலியுறுத்தினர்.அதுமட்டுமின்றி அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக அரசு எடுத்த நடவடிக்கை, பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான அறிக்கையுடன், அரசின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.