"நம் பணத்தை பிற மாநிலங்களுக்கு அள்ளியும் நமக்கு கிள்ளியும் ஒன்றிய அரசு வழங்குகிறது" அமைச்சர் குற்றச்சாட்டு!

"நம் பணத்தை பிற மாநிலங்களுக்கு அள்ளியும் நமக்கு கிள்ளியும் ஒன்றிய அரசு வழங்குகிறது" அமைச்சர் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணம் முழுவதுமாக தமிழ்நாடு  மக்களுக்கு பயன்படுத்தப்பட்டால் நாம் யாரிடமும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நம்மிடமிருந்து பெறப்பட்ட ஜிஎஸ்டி வரிப்பணத்தை நமக்கு கிள்ளியும் பிற மாநிலங்களுக்கு அள்ளியும் மத்திய அரசு வழங்குகிறது என அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார்.

ஆகஸ்ட் 19 ஆம் தேதி தேசிய சீட்டு நிதி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதனை கொண்டாடும் விதமாக அனைந்து இந்திய சீட்டு நிதி சங்கம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் சீட்டு நிதி விழா நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டு, நடப்பாண்டில் சிறந்த பங்காற்றிய நிறுவனங்களாக தேர்வு செய்யப்பட்டவற்றிற்கு விருதுகளை  வழங்கி கௌரவித்தனர்.  

இதில் அனைத்து இந்திய சீட்டு நிதி சங்க தலைவர் பிரவின், அனைத்து இந்திய சீட்டு நிதி சங்க ஆலோசகர் சிவராமகிருஷ்ணன், இந்திய சீட்டு நிதி ஆலோசகர் வாரிய தலைவர் இளங்கோவன், இந்திய சீட்டு நிதி சங்க தலைவர் சிற்றரசு, செயலாளர்  உமாபதி, தமிழ்நாடு சீட்டு நிதி சங்க தலைவர் கிருஷ்ண பாரதி, செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், 

இவ்விழாவில் பேசிய வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தேசிய சீட்டு நிதி தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் மக்கள் வங்கியில் சென்று சேமிப்பதை விட சீட்டு நிறுவனங்களுக்கு சென்று சேமித்தது அதிகம். முறையாக பதிவு செய்யாமல் மக்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை ஏமாற்றும் சில நிறுவனங்கள் நடத்தி வருகின்றன அவற்றை முறையாக கையாளும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீட்டு நிதி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மக்கள் சேமிப்பில் பெரும் உதவியாக இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் சேமிப்பை சிறுசேமிப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சீட்டு நிதி நிறுவனங்களின் பங்கும் அதிகம் என தெரிவித்தார்.

நிறுவனங்கள் பதிவு செய்யும் பொழுது தாமதங்களும், சில சிக்கல்களும் ஏற்படுகின்றன கூறினீர்கள், விரைவில் அவை நிவர்த்தி செய்யப்படும். தற்போது வீட்டுமனை, பட்டா, நிறுவனங்கள் பதிவு போன்றவை அனைத்தும் ஒரே இடத்தில் பதிவு செய்யப்படுவதால் சிறிது தாமதம் ஏற்படுகிறது. ஆன்லைன் பதிவு செய்வதில் 2. 0 மென்பொருள் பயன்பாட்டில் அடுத்த 6 மாதத்தில் 3.0 மென்பொருள் சேவை பயன்பாட்டில் கொண்டு வர உள்ளோம். இதன் காரணமாக பதிவித்துறையின் வேகம் அதிகரிக்கும்.

மக்களிடம் இருந்து வாங்கப்படும் ஜிஎஸ்டி வரிப்பணத்தை பாதிக்கு மேல் ஒன்றிய அரசிடம் வழங்கி வருகிறோம். அந்தப் பணம் மாநிலத்தை விட பிற மாநிலங்களுக்கு தான் அதிக அளவில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் பணம் முழுவதுமாக தமிழ்நாட்டிற்கு பயன்படுத்தப்பட்டால் நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை இல்லை. நம் பணத்தை பிற மாநிலங்களுக்கு அள்ளியும் நமக்கு கிள்ளியும் ஒன்றிய அரசு வழங்குகிறது என தெரிவித்தார்.

இதையும் படிக்க: "பாஜக கூட்டணியுடன் இருக்கும் வரை அதிமுகவிற்கு பின்னடைவுதான்" திருமா கருத்து!