வழி மறிப்பீங்களா, நான் யார் தெரியுமா? போதையில் போக்குவரத்துப் போலீசாரை தாக்க முயன்ற இளைஞர்...வீடியோ வைரல்....!!
வழி மறிப்பீங்களா, நான் யார் தெரியுமா? உள்ளூருகாரன்... உங்களால் என்னை செய்ய முடியும் என்று போக்குவரத்துப் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,தாக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட ஏரிக்கரை மூலைப் பகுதியில், போக்குவரத்துப் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தப்பேட்டையில் இருந்து ஏரிக்கரை மூலைக்கு, பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தனர்.
இதனைக் கவனித்த போக்குவரத்துத் தலைமைக் காவலர், அவர்களை தடுத்து நிறுத்தினார். அப்போது, வாகனத்தில் பயணித்த இருவர் இரு சக்கர வாகனத்துடன் தப்பியோடினர். அதில் ஒருவர் மட்டும் ஆத்திரமடைந்து, தலைமைக் காவலரிடம் தகாதவார்த்தை பேசி, ரகளையில் ஈடுபட்டார்.
நான் யார் தெரியுமா? உள்ளுர்காரன், என்னையே வழி மறுப்பியா என்று அந்த இளைஞர் ரகளையில் ஈடுபடவே, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல் உதவி ஆய்வாளர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரகளையில் ஈடுபட்ட இளைஞரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
அதில் போக்குவரத்துப் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட இளைஞர், அரும்பாக்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போக்குவரத்துப் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களிடம் ரகளையில் ஈடுபட்டு, தாக்க முயன்ற மூர்த்தி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.