விருகம்பாக்கம் உள்பட 5 இடங்களில் திடீர் சோதனை...அமலாக்கத்துறை சொல்லப்போகும் தகவல் என்ன?
சென்னையில் விருகம்பாக்கம், ராயபுரம், மிண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ஹவாலா முறை:
ஹவாலா முறை என்பது ஒரு நாட்டில் , அந்த குறிப்பிட்ட நாட்டு கரண்சியாக வழங்கப்படும் பணம், யாருக்கு போய் சேர வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட நாட்டின் கரண்சியாக வழங்கப்படும். அதாவது பணப் பரிவர்த்தனை தரகர்கள் மூலமாக பெருமளவு பணத்தை பரிமாற்றம் செய்யும் முறையாகும். இந்த முறையால், பெருமளவு வரி கட்டுவது குறைக்கப்படும் என்பதால் தீவிரவாதிகள் உள்பட பெருமளவில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம்:
சட்டவிரோதமாக ஹவாலா முறையில் நிதி திரட்டி, தீவிரவாத இயக்கங்களுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகள் வழங்கி வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஏற்கனவே பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புள்ள நிறுவனங்களை மையப்படுத்தி அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது பயங்கரவாதச் செயல்களுக்கு உதவும் வகையில் அந்நிறுவனங்கள் சுமார் 120 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி, அதை வங்கிகளில் செலுத்தி இருப்பது தெரியவந்ததாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த தொகை உள்நாட்டிலும், வளைகுடா நாடுகளிலும் திரட்டப்பட்டு 'ஹவாலா' முறையில் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க: இழுபறியில் காங்கிரஸ் VS பாஜக: தடுமாறும் பாஜக...இமாச்சலில் ஆட்சி மகுடத்தை பிடிக்கப்போவது யார்?
5 இடங்களில் திடீர் சோதனை:
இதையடுத்து ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக தொடர்ந்து அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று காலை முதல் விருகம்பாக்கம், ராயபுரம், மிண்ட் உட்பட சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை குறித்து தெரிவித்த அமலாக்கத்துறை, ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாகவே இந்த சோதனையும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள நிலையில், இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சோதனைக்கு பின்பே தகவல் வெளியாகும்:
குறிப்பாக விருகம்பாக்கம் ஷேக் அப்துல்லா நகரில் உள்ள ஷஃபியுல்லா மற்றும் நியமதுல்லா என்பவர்களின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதலே சோதனையானது நடைபெற்று வரும் நிலையில், மேலும் 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சோதனைக்குப் பின்பே முழு விபரங்களும் வெளியிடப்படும் என அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.