நளினி விடுதலை கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

ஆளுனரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

நளினி விடுதலை கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9 ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுனர் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி  நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், 

அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும்,  இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் போல், விடுதலை செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அதற்கு உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து வாதிட்ட நளினி தரப்பு வழக்கறிஞர், விடுதலை செய்யக் கோரவில்லை எனவும், அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர்,  நளினிக்கு  விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 ல் அமைச்சரவை ஆளுனருக்கு பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாக கூறிய அவர், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றமே பரிசீலிக்கலாம் எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நளினி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.