நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் வருமான வரி சோதனை....!!
நடிகர் விஜயின் உறவினரும் சினிமா பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தின் ஏற்றுமதி- இறக்குமதிகளை கையாளும் பணிகளை மேற்கொண்டு வரும் லாஜிஸ்டிக் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம், கிடங்கு மற்றும் உரிமையாளர் இல்லம் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கேர்ரி இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சேவியர் பிரிட்டோ இவர் பிரபல சினிமா பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய்யின் உறவினர் ஆவார். ஷியோமி நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதியை கையாள்வதில் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
அதனடிப்படையிலேயே சேவியர் பிரிட்டோவிற்கு சொந்தமான அடையாறில் உள்ள அவரது இல்லம், பாரிமுனையில் உள்ள நிறுவன அலுவலகம், மயிலாப்பூரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகம், இருங்காட்டுகோட்டை சிப்கட்டில் உள்ள கிடங்கு உள்ளிட்ட நான்கு இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.