கருத்தடை ஆப்ரேஷனில் பெண் உயிரிழந்தால்....உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்...!

கருத்தடை ஆப்ரேஷனில் பெண் உயிரிழந்தால்....உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்...!

அரசு மருத்துவமனைகளில் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்க கூடிய இழப்பீடு 2 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சமாக உயர்த்தி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குடும்ப கட்டுப்பாடு தோல்வி அடைந்ததால் இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கனிமொழி:

திருவள்ளூர் மாவட்டம் பெரிய கரும்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் மனுவில், கடந்த 2016 ஆம் ஆண்டு பாலாஜி என்பவருடன் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பாடி அரசு மருத்துவமனையில் கடந்த 2018 ம் ஆண்டு  குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். குடும்ப கட்டுப்பாடு செய்த பின்பும் கர்ப்பமானதால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து பாடி மருத்துவமனைக்கு சென்று கேட்டதில் அங்கு உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று  கேட்டபோது அது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை தவறும்பட்சத்தில் அதற்கான இழப்பீடாக 30 ஆயிரம் ரூபாய் தருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். வேறு வழி இல்லாமல் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் ,  குடும்ப கட்டுப்பாடு தோல்வி அடைந்ததால் தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்  கனிமொழி கோரிக்கை வைத்திருந்தார்.

மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது:

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ துறை அதிகாரி உள்ளிட்டவருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர்கள் உயர்நீதிமன்ற உத்தரவிட்ட பின்பும் எந்த நிவாரணமும் அளிக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார் கனிமொழி. 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு :

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.நித்தியா, இதேபோல நடந்த சம்பவத்திற்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் சுமார் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார். மேலும் மனுதாரர் கூலித் தொழிலாளி என்றும் குடும்பம் வறுமையில் உள்ளதாகவும் வாதங்களை எடுத்து வைத்தார். 

அரசு தரப்பு வாதங்கள்:

இதனைத்தொடர்ந்து, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் வாதங்களை முன்வைத்தார். அதில் ஒரு பெண் குடும்ப கட்டுப்பாடு காப்பீட்டு திட்டத்தின் கீழ், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட  ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து, 4 லட்சம் ரூபாயாக் உயர்த்தப்பட்டிருப்பதாகவும், ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறி, அரசாணையை தாக்கல் செய்தார். மேலும், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக ஒருவர்  60 நாட்கள் வரை இருந்தால் சிகிச்சை செலவு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கை முடித்துவைத்தார் நீதிபதி:

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.தண்டபாணி, வழக்கை முடித்து வைத்து மனுதாரருக்கு வேறு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் தனியாக வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.