புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடா..? விரைவில் அறிவிக்க வாய்ப்பு...

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடா..? விரைவில் அறிவிக்க வாய்ப்பு...

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக மெரினா கடற்கரை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் டிசம்பர் 31ம் தேதி இரவு ஒன்று கூடி புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.  ஆனால், கொரோனா பெரும் தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. 

இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் பெரிய வரவேற்பு இல்லாமல் போனது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. அதேநேரம் மெரினா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகளின் பக்கம் திரும்பி உள்ளனர். 

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதேநேரம் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு மற்றும் புத்தாண்டு தினத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்துவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என்று தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், புத்தாண்டு கொண்டாட்டம் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பது குறித்தும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களில் கூட்டங்கள் கூடுவதை கட்டுப்படுத்தவும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.