ரஷ்யாவில் 13 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மாயம்...

ரஷ்யாவில் இருந்து 13 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சைபீரியா அருகே மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் 13 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மாயம்...

ரஷ்யாவின் கெட்ரோவி நகரில் இருந்து டோம்ஸ்கி நோக்கி பறந்து கொண்டிருந்த ஆன்டனோவ் ஆன்-28 ரக விமானம் திடீரென ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்துள்ளது. சுமார் 13 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த விமானம் சைபீரியா அருகே சென்று கொண்டிருந்தபோது அதன் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விமானத்தை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், விமானதை தேடும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தரைப்படையும் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 6ஆம் தேதி இதேபோல் ஆன்டனோவ் ஆன்-26 ரக விமானம் திடீரென ரேடாரில் இருந்து மறைந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியாகினர். தற்போது இரண்டாவதாக ஒரு விமானம் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.