ஊதிய உயர்வு கோரி புதுச்சேரி சுகாதார பணியாளர்கள் போராட்டம்!
மாதம் ஒரு முறை தற்செயல் விடுப்பு வழங்க உறுதியளிக்கப்பட்டது
சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஊதிய உயர்வு வழங்கக் கோரிக்கை
புதுச்சேரி சுகாதாரத் துறையில் 300க்கும் மேற்பட்ட ஆஷா(அங்கீகரிக்கப்பட்ட சமூக நலவாழ்வு செயற்பாட்டாளர்) பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கிட வலியுறுத்தியும் தீபாவளி கருணைத்தொகை வழங்க வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இதுவரை எந்தவித அறிவிப்பும் சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்படவில்லை. இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியாளர்களுக்கு வாக்குறுதி
தொடர்ந்து சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு ஊழியர்களை உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாகவும், உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வு ரூ. 3000/- முன்தேதியிட்டு, வரும் வாரத்திலேயே வழங்கப்படும் என்றும், மாதம் ஒரு முறை தற்செயல் விடுப்பு வழங்கவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். எனவே வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.