முருங்கை விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை..!

முருங்கை விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை..!

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில்  தக்காளியை தொடர்ந்து முருங்கை விலையும்   வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய மொத்த காய்கறி சந்தை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில்  செயல்பட்டு வருகிறது.  

திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கரூர் உட்பட பல  மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விளைவிக்கக் கூடிய காய்கறிகளை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு லாரி, சரக்கு வேன், பேருந்து போன்றவற்றில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து நாள்தோறும்  60% காய்கறிகளை கேரளா வியாபாரிகள்  வாங்கி செல்வது வழக்கம். மீதமுள்ள 40%  காய்கறிகள்  தமிழகத்தில் உள்ள சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி,தேனிமதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம்,குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் முருங்கை வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்தனர். அப்போது ஒரு கிலோ முருங்கை  ரூபாய் 100-க்கு மேல் விற்பனையானது.

தற்போது அங்கேயே முருங்கைக்காய் கிடைப்பதால் இச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வரத்து குறைந்துவிட்டது.இச்சந்தைக்கு சில வாரங்களாக முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது.தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த  சில வியாபாரிகள் தேவைக்கேற்ப மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது கரும்பு மற்றும் செடி முருங்கை கிலோ ரூ. 7. க்கும்,மர முருங்கை கிலோ ரூ.5 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தக்காளியை தொடர்ந்து முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் இப்பகுதியில் முருங்கைக்காய் பயிரிட்ட விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். 

இதையும் படிக்க   |  தேயிலைக்கு விலை வேண்டி 11-வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்..!