பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில்  விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் ஆறு மணி நேரமாக போராட்டத்தை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில்  விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு135 நாட்கள் கால இடைவெளி விட்டு நான்கு சுற்றுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பாசன சபைகளுடன் பேச்சுவார்த்தை

நீர் பங்கீடு தொடர்பாக134 பாசன சபை சங்க தலைவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளர் தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது  வெள்ளகோயில் பகுதியைச் சேர்ந்த பாசன சபை தலைவர்கள் எங்கள் பகுதிக்கு வெள்ளகோயில் வாய்கால் மூலம் வழங்க வேண்டிய உரிமையாளர் நீரை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியதால் இரு தரப்பு விவசாயிகளிடையே காரசார விவாதம் ஏற்பட்டது.

சமரசம் செய்த அதிகாரிகள்

அதிகாரிகள் சமரசம் செய்த பிறகு ஒரு தரப்பு விவசாயிகள் கலைந்து சென்றனர். தொடர்ந்து வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் ஆறு மணி நேரமாக போராட்டத்தை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

22 ஆண்டுகளாக மறுப்பு

வெள்ளக்கோயில் வாய்க்காலை நம்பி 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தில் இருந்து இந்த பகுதிக்கு வர வேண்டிய தண்ணீரை பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட நிர்வாகம் 22 ஆண்டுகளாக தர மறுத்து வருகின்றது. கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து தண்ணீர் கிடைக்காததால் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதோடு விவசாய நிலங்கள் வறட்சி ஏற்பட்டு வாழ்வாதாரம் அடியோடு
பாதிக்கப்பட்டு வருகிறது.எனவே எங்கள் கோரிக்கைகளுக்கு சமூக முடிவு எட்டப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.