நன்றியின் காவலன் அப்புவிற்கு படத்திறப்பு விழா!

நன்றியின் காவலன் அப்புவிற்கு படத்திறப்பு விழா!

வேதாரண்யம் அருகே  வளர்ப்பு நாய்க்கு உறவினர்களை அழைத்து படத்திறப்பு விழா நடத்தியுள்ளனர் அந்த வளர்ப்பு நாயின் உரிமையாளர்கள்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம்  கிராமத்தில் தர்மலிங்கம் -அமுதா வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகும் நிலையில்  குழந்தைகள் இல்லாததால் குழந்தை போல் பாசமாக அப்பு என்ற நாய்க்குட்டியை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகின்றனர்.

தர்மலிங்கம் வீட்டிற்கு அருகே மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி மளிகை கடைக்கு அருகே அப்பு சாலையில் நடந்து சென்ற போது அங்கு வந்த லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது. இதைப் பார்த்த தர்மலிங்கமும் அவரது மனைவியும் கதறி அழுதனர்.

பின்னர் அப்புவின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து,  மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்வதுபோல் அனைத்து சடங்குகளையும் செய்தனர். இதற்காக, தர்மலிங்கம் மொட்டை அடித்து கொண்டார். இந்நிலையில் சடங்குகள் முடிவடைந்ததும் அப்புவின் உடலை அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்தனர்.

பின்னர், இறந்த அப்புவிற்கு படத்திறப்பு விழா நடத்த முடிவு செய்தனர். படத்திறப்பு விழாவிற்கான பத்திரிக்கையை வாட்ஸ் அப் மூலம் உறவினர்கள், நண்பர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், 10வது நாளான இன்று அவர்களது இல்லத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு  அப்புவிற்கு படதிறப்பு விழா நடைபெற்றது.

அப்போது, அப்புவின் திருவுருவப் படத்தினை கருப்பம்புலம் அரசு கால்நடை தலைமை மருத்துவர் மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்து மாலை அணிவித்தார். அங்கு வந்திருந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அப்புவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது அப்புவின் நினைவில் தர்மலிங்கத்தின் மனைவி அமுதாக கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இந்நிகழ்வில் அப்புவிற்கு பிடித்த சிக்கன் பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் வைத்து படையல் இடப்பட்டது. அப்புவின் படத்திறப்பு விழா அழைப்பிதழை வாட்ஸ் அப்பில் பார்த்த அப்பகுதி கால்நடை மருத்துவர்கள், கால்நடை மருத்துவ உதவியாளர்கள் ஏராளமானோர் வருகை தந்து திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், அப்புவின் படத்திறப்பு விழாவில் உறவினர்கள் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க:எதிர்க்கட்சிகள் அமளி - 2ம் நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!