கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டத்தில் இறங்கிய மாணவர் சங்கம்...!

கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டத்தில் இறங்கிய மாணவர் சங்கம்...!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வட்டார சேவை மையத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை செய்து தரக்கோரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் தரக்குறைவாக பேசியதாகவும், மாணவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட  மணிபாரதி, ரஞ்சித், பிரகாஷ் ஆகிய மூன்று மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்லூரிக்கு வருகிற 14ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை மிரட்டியும், அவதூறாக பேசும் கல்லூரி முதல்வர் விஜயேந்திரனை பணிநீக்கம் செய்யக்கோரியும், மாணவர்களை இடைநீக்கம் செய்ததை ரத்து செய்யக்கோரியும், கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டிதரக்கோரியும், தற்போது வட்டார சேவை மையத்தில் இயங்கி வரும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செய்து தரக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து கல்லூரி முதல்வரை கண்டித்தும் குத்தாலம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.