வழக்கறிஞர்கள் போராட்டம்; தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண் உதவி ஆய்வாளர்! 

வழக்கறிஞர்கள் போராட்டம்; தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண் உதவி ஆய்வாளர்! 

புதுக்கோட்டையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் கணவன்- மனைவி இடையே பிரச்சினை தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் கலீல் ரகுமான், தனது கட்சிக்காரரான பெண் தரப்பிற்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அப்போது கலீல் ரகுமானை, அந்த பெண்ணின் கணவன் ஆரோக்கியராஜ் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு குறித்து 6 தினங்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கடந்த 7ம் தேதி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் கலீல் ரகுமானை தரக்குறைவாக பேசிய ஆரோக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆரோக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்காத திருக்கோகர்ணம் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து ஆரோக்கியராஜை கைது செய்யாததால், அவரை கைது செய்யவும், திருக்கோகர்ணம் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தினர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது காவல்துறையினரால் வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  இதனையடுத்து வழக்கறிஞர்கள், புதுக்கோட்டை மதுரை சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து எங்களது கோரிக்கையை கேட்க வேண்டும், இல்லையெனில் போராட்டம் தொடரும் என கூறி மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆரோக்கியராஜை 2 நாட்களில் கைது செய்யவும், உதவி காவல் ஆய்வாளரை ஆதனக்கோட்டைக்கு பணியிட மாற்றவும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தின்போது திருக்கோணம் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவை வழக்கறிஞர்கள் மன உளைச்சல் ஏற்படும்படி பேசியதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர் நடவடிக்கையாக காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா நேற்று இரவு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை மீட்ட அவரது குடும்பத்தினர், புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க:கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்; செப்டம்பரில் திறப்பு!