கோவில் உண்டியல் உடைத்து திருட்டு...! தீவிர விசாரணை மேற்கொள்ளும் போலீசார்...!

கோவில் உண்டியல் உடைத்து திருட்டு...! தீவிர விசாரணை மேற்கொள்ளும் போலீசார்...!

மதுரை மாவட்டம் மேலூர் திருவாதவூர் சாலை மில்கேட் பகுதியில் முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்நிலையில் நேற்று துர்கா அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். இன்று ஆயுத பூஜை என்பதால் அதனை கொண்டாட கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர், இந்த நிலையில் இன்று அதி காலை கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை திறக்க வந்த போது வெளி கேட்டின் பூட்டு உடைக்க பட்டு கதவு திறந்து இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த மூன்று உண்டியல்களில் இரண்டு உண்டியல்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. 

பின்னர் அவர் கொடுத்த தகவலையடுத்து கோவில் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர், இதுவரை இது போன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்ததில்லை என நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், முத்துமாரியம்மன் கோவிலில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.