திருவிழாவில் இரு கிராம இளைஞர்கள் மோதல்... ஓட ஓட விரட்டியடித்த பொதுமக்கள்!!

திருவிழாவில் இரு கிராம இளைஞர்கள் மோதல்... ஓட ஓட விரட்டியடித்த பொதுமக்கள்!!

ஆம்பூர் அருகே சிரசு  திருவிழாவில், இரு கிராமத்து இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டதில், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர், தேவிகாபுரம் பகுதியில் வருடா வருடம் ஆனி மாதம் தேவிகாபுரம், உடைய ராஜபாளையம், தோட்டாளம் , சீனிவாசநகர், கொல்லாபுரம் உள்ளிட்ட ஏழு கிராமங்கள் ஒன்றிணைந்து மூன்று நாட்கள் கெங்கையம்மன் திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில் மூன்றாவது நாளான இன்று, தேவிகாபுரம் பாலாற்றங்கரையிலிருந்து கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக வீதியில் வந்து கொண்டிருந்தபோது பெண்கள்  வழிநெடுக்கிலும்  அங்கப் பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

அப்போது பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்த பகுதியில் நேற்றிரவு அதே பகுதியில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது சின்ன தோட்டாளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பகுதி இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் முன் விரோத காரணமாக சின்னத்தோட்டாளம் பகுதியை சேர்ந்த 10க்கும்  மேற்பட்ட இளைஞர்கள் தேவிகாபுரம் பகுதி இளைஞர்களுடன் மோதலில் ஈடுபட்டு பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். 

பின்னர் மோதல் முற்றி கட்டைகளால் தாக்கியும் அங்கிருந்த அன்னதானம் போட வைத்திருந்த அண்டா மூடி உள்ளிட்டவைகளால் தாக்கியதில் தேவிகாபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் மோகன் என்பவருக்கு முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தேவிகாபுரம் பகுதி இளைஞர்கள் ஒன்று கூடியதால் மோதல் முற்றி அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் காவல் துறையினர் பிரச்சனையில் ஈடுபட்ட சின்ன தோட்டாளம் பகுதியை சேர்ந்த இளைஞர்களை  விரட்டி சென்ற போது அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் படுகாயமடைந்த இளைஞர் மோகனை, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தகவல் அறிந்து வந்த ஆம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சிரசு திருவிழாவில் மோதலில் ஈடுபட்டு தாக்கி விட்டு தப்பி  சென்ற சின்னத்தோட்டாளம் பகுதியை சேர்ந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: சின்னத்திரை நடிகர்கள் சங்கம் சார்பில் மருத்துவ முகாம்!!