கொடைக்கானலில் அதிகாரிகளின் துணையோடு ஜேசிபி வாகனங்களின் பயன்பாடு!!

கொடைக்கானலில் அதிகாரிகளின் துணையோடு ஜேசிபி வாகனங்களின் பயன்பாடு!!

கொடைக்கானலில் ஜேசிபி  மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் மலைத் தள விதிகளின் அடிப்படையில் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் இயக்குவதற்கு தடை உள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட அனுமதி பெற்ற பின்னரே குறிப்பிட்ட நாட்களுக்கு இந்த இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஆனால் சமீப காலமாக வணிக பயன்பாட்டிற்கு, சட்டவிரோதமாக மலைகளை உடைப்பதற்கு இந்த கனரக வாகனங்களான ஜேசிபி ஹிட்டாச்சியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி , பள்ளங்கி மற்றும் நகர் பகுதிகள் ஒட்டி உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளின் துணையுடன் இந்த எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஜேசிபி கனரக வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதுடன் வெடிவைத்து பாறைகள் உடைக்கும் சம்பவமும் அதிகரித்து உள்ளது. 

இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இதனைக் கருத்தில் கொண்டு கொடைக்கானலில் ஜேசிபி  மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தடையை மீறி இயக்குபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க || அமைச்சர் பதவியிலிருந்து உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபுவை நீக்க வேண்டி ஆளுநருக்கு மனு!!