சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... வாலிபருக்கு 20 ஆண்டு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு...

நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... வாலிபருக்கு 20 ஆண்டு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு...

நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூர்  அடுத்த மரவாப்பாளையத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி, பரமத்திவேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனயில் பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 29, என்பவர், சிறுமியிடம் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியில் உடலில் மாற்றத்தை அறிந்த பெற்றோர் சந்தேகம் அடைந்து விசாரித்தனர். அப்போது, மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவரது வீட்டுக்கு அழைத்து சென்று, கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததையும், இதை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார் என தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், 2014, நவ., 9ல், மணிகண்டன் வீட்டுக்கு சென்று, அவரது பெற்றோரிடம், தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டனர். ஆனால், மணிகண்டன், அவரது தந்தை பொன்னுசாமி, தாய் லட்சுமி, மாமா ஸ்ரீதர் ஆகியோர் தகாத வார்த்தையால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து, பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, மணிகண்டன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மணிகண்டனுக்கு, இரு பிரிவுகளில், 20 ஆண்டு சிறையும் 5,000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

மேலும், இந்த தண்டனையை, அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, மணிகண்டன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவை அழைத்து செல்லப்பட்டார்.