மீண்டும் வேலைக்கு சேர்க்க காவல் ஆய்வாளர் வசந்தி மனு!

மீண்டும் வேலைக்கு சேர்க்க காவல் ஆய்வாளர் வசந்தி மனு!

வழிப்பறி வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், தன்னை மீண்டும் பணியில்  சேர்க்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டார். இதனையொட்டி அவர் காவல் ஆய்வாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில், தனது பணி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி வசந்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "நான் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக பணிபுரிந்த போது கடந்த 5.7.2021-ல் சிலர் கள்ள நோட்டுகளை மாற்றுவதாக தகவல் கிடைத்தது. இந்த வழக்கில்  நான் உரிய நடவடிக்கை எடுத்த நிலையில், வழக்கில் தொடர்புடைய நபரிடம் இருந்து நான் ரூ.10 லட்சம் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் பேரில் என் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்தனர்.  இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் நிபந்தனைபடி என்னால் மதுரையை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால் என்னால் விருதுநகரில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக முடியவில்லை. இருப்பினும் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அனுப்பினேன்.

இந்நிலையில் என்னை பணியிலிருந்து நீக்கி 11.4.2023-ல் மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டார். இதில் பணி நீக்க உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு எனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து விளக்கமளிக்க காவல்துறை சார்பாக மதுரை எஸ்.பி. சிவபிரசாத் ஆஜராகியிருந்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வசந்தி மீது  2 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதால், காவல் துறை உயர் அதிகாரிகள் இவர் மீது துறைரீதியான  நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்து உள்ளனர். எனவே, பணி நீக்கம் செய்து காவல் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:நள்ளிரவில் வாபஸ்...அந்தர் பல்டி அடுத்த ஆளுநர்...!