இப்படி சண்ட போட்டுக்காதீங்க...பேசி தீர்க்க பாருங்க...அன்புமணி அட்வைஸ்!

இப்படி சண்ட போட்டுக்காதீங்க...பேசி தீர்க்க பாருங்க...அன்புமணி அட்வைஸ்!

ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்...

ஆளுநர் மீது குற்றம் சாட்டும் திமுக:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் திமுக தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிகழ்ந்து வருவதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் பகிரங்கமாக பேட்டியளித்தார். அதேபோல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும், அரசு நிகழ்வுகள், பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி வருவதாகவும் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

மனுவில் கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திமுக முடிவு செய்தது. அதன்படி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ள அறிக்கையில் கையொப்பமிடுமாறு டி.ஆர்,பாலு அழைப்பு விடுத்ததையடுத்து, திமுக மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்தில் கையெழுத்திட்டனர். அந்த கடிதம் குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்பப்படவுள்ளது.

திமுக vs தமிழிசை:

இதனிடையே, தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆளுநர்களே; எரிமலையோடு விளையாடாதீர்கள்!’ என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியானது. இதையடுத்து, முரசொலி வெளியிட்ட கட்டுரைக்கு ``எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே... உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா?...” என  ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக பதிலளித்திருந்தார்.

இதையும் படிக்க: 3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி...வன்முறை வெடிக்குமா? பதற்றத்தில் போலீசார்...!

அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்:

இந்நிலையில், ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து பிரச்னையை பற்றி பேசி தீர்க்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு, ஆளுநர் அனைத்து உதவிகளையும் செய்து அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, ஆளுநரும், தமிழக அரசும் இணைந்து செயல்படவேண்டும் என அறிவுறுத்திய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வேண்டுமென்றே ஆளுநர் எதிர்க்க கூடாது. இதனை இருவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் மனு அனுப்பப்படும்:

முன்னதாக,  சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரி விழாவில்  செய்தியாளர்களை சந்தித்த திமுக துணை பொது செயலாளார் கனிமொழி, பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக வேண்டுமென்றே ஆளுநர்கள் மரபுகளை மீறி பேசி வருவதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மதிக்காத வகையில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், மாநில உரிமைகளை மீறக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழக ஆளுநரை திரும்பப் பெறுவதற்கான திமுக கூட்டணியின் மனு விரைவில் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.