கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்கள் விடுதலை!

கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்கள் விடுதலை!

தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட்தாக கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் 6 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மீனவர்களிடம் விசாரணை

கடந்த மாதம் 27 ஆம் நாள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரும்  ஆகஸ்ட் 28 ஆம் நாள் காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் செயலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் செயலக அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட  மன்னார் நீதிபதி செப்டம்பர் 12 வரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த மீனவர்கள் செப்டம்பர் 12 மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

படகு அரசுடைமையாக்கப்படும்

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிபதி குறித்த மீனவர்கள் 6 பேரையும் 3 வருட சிறைத்தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். மேலும் எதிர் வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி படகு உரிமையாளர்களுக்கான வழக்கு விசாரணை நடைபெறும்.அன்றைய தினம் படகு உரிமையாளர் வழக்கு மன்றத்தில் நேரில் வராவிட்டால் படகு அரசுடமையாக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

மேலும் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இந்திய உயர் ஆணையர் அலுவலக அதிகாரிகள் ஊடாக மிகிரியாகம முகாமிற்கு அனுப்பி தமிழ்நாட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டார். இந்த நிலையில் மீனவர்கள் இந்திய உயர் ஆணையர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.