ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கை…சீனா-இந்தியாவுக்கு முக்கியத்துவமா?

ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கை…சீனா-இந்தியாவுக்கு முக்கியத்துவமா?

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் ஆறு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் நிலையில், ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கு ஆதரவாக உள்ள ரஷ்ய உலகம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய வெளியுறவுக் கொள்கையை அந்நாடு செயல்படுத்த உள்ளது.

புதிய வெளியுறவுக் கொள்கை

இதற்கு அதிபர் புதின் ஒப்புதல் வழங்கியுள்ளார். 1991 ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது ​​ரஷ்யாவிற்கு வெளியே புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளில் வசிக்கும் இரண்டரைக் கோடி ரஷ்ய மக்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் நலன்கள் மற்றும் ரஷ்ய பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான ஆதரவை ரஷ்ய வெளியுறவுக் கொள்கை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆசியா வரை முன்னாள் சோவியத் யூனியன் இருந்த இடத்தை ரஷ்யா தனது சட்டபூர்வ செல்வாக்கு மண்டலமாக தொடர்ந்து கருதுவதாக அந்நாட்டு புதிய வெளியுறவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் சீனா மற்றும் இந்தியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவுடனான தனது உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் புதிய வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர நாடுகளுடனான உறவு

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜார்ஜியாவிற்கு எதிரான போருக்குப் பிறகு மாஸ்கோவால் சுதந்திரமாக அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஜார்ஜியப் பகுதிகளான அப்காசியா மற்றும் ஒசேஷியாவுடன் ரஷ்யா தனது உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுகென்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றுடன் ரஷ்யாவின் உறவை வலுப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய வெளியுறவுக் கொள்கையில் இடம் பெற்றுள்ளன.