வேலைத் தேடி சுற்றுலா விசாக்களில் செல்பவர்களை நாடு கடத்தும் மலேசியா!

வேலைத் தேடி சுற்றுலா விசாக்களில் செல்பவர்களை நாடு கடத்தும் மலேசியா!

சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பலர் மலேசியாவுக்கு செல்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, சுற்றுலா விசாக்கள் எனப்படும் பார்வையாளர் விசாக்களில் செல்லும் செல்பவர்களை மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாரந்தோறும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு மலேசிய அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் அவர்களை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அவர்களின் நாட்டுக்கே நாடுகடத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த கட்டுப்பாடுகளையும் மீறி சுற்றுலா விசாக்கள் மூலம் மலேசியாவுக்குள் நுழைந்த பலர், தரகர்களின் பேச்சை நம்பி மோசமான நிலையில் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மோசமான சூழ்நிலைகளின் கீழ் வலுக்கட்டாயமாக எவ்வித தொழிலாளர் உரிமைகளுமின்றி வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு செல்பவர்கள் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், பலர் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் இலங்கையர்கள் படகு வழியாக தஞ்சமடையும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது மலேசியாவுக்கு வேலை தேடிச் செல்பவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்களே அதிகம் எனக் கூறப்படுகிறது.