இலங்கையில் இருந்து மீண்டும் தஞ்சம் புகுந்த 8 தமிழர்களிடம் போலீசார் விசாரணை!

இலங்கையில் இருந்து மீண்டும் தஞ்சம் புகுந்த 8 தமிழர்களிடம் போலீசார் விசாரணை!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக தமிழ்நாடு வந்த 8 இலங்கைத் தமிழர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், மக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்கே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. மேலும் கட்டுக்கு அடங்காமல் விலைவாசி ஏறி உள்ளது. இதையடுத்து இலங்கையில் இருந்து பலர் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். 

இன்று தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதிக்கு இலங்கையில் இருந்து அகதிகளாக எட்டு பேர் வந்திருப்பதாக போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல்துறை அதிகாரிகள் 8 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கள்ளத்தோணி மூலம் தமிழ்நாடு வந்ததாக அவர்கள் தெரிவித்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். 

ஒருபுறம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துவரும் நிலையில், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.