“முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழ்நாடு” - முதலமைச்சர் பெருமிதம்!

“முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழ்நாடு” - முதலமைச்சர் பெருமிதம்!

முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருவதாக ஜப்பான் ஒசாகாவில் நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு 2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றடைந்தார். தொடர்ந்து ஜப்பானின் கான்சாய் விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி உள்ளிட்டோர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பானின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, திருப்போரூர் டைசல் நிறுவன தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இதையும் படிக்க : கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகத்தை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

இதைத்தொடர்ந்து ஒசாகாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதாக தெரிவித்தார். 

தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருவதாகவும் கூறினார். மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில், ஒசாகா துணை ஆளுநர் நோபுஹியோ யமாகுஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.