510 உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல்...ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!

510 உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல்...ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!

தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மாநகராட்சி உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 510 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள திருலோகி ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்த சாந்தி ரங்கநாதன் இறந்துவிட்டதால், இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவபுராணி தொடக்கப்பள்ளியில் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சியின் 9 வார்டுகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது பகுதி உறுப்பினருக்கான தேர்தல், தியாகி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து செங்கல்பட்டில் நிரப்பப்படாமல் உள்ள 10வது வார்டு, மதுராந்தகம் 15வது வார்டு உள்ளிட்ட 6 இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.