அரசுப்பள்ளியில் போதிய இடவசதி இல்லை... சாலையின் இருபுறமும் அமர்ந்து கற்கும் மாணவர்கள்!!

அரசுப்பள்ளியில் போதிய இடவசதி இல்லை... சாலையின் இருபுறமும் அமர்ந்து கற்கும் மாணவர்கள்!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாமல், மாணவர்கள் சாலை ஓரங்களில் அமர்ந்து படித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் ஆன்மீகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி படித்த பெருமைக்குரிய சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் 450-பேர் படிக்க வேண்டிய பள்ளி கட்டிடத்தில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருவைத்தால், இட நெருக்கடியால் மாணவ, மாணவியர்கள் பள்ளியை விட்டு வெளியே சாலையின் இருபுறமும் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு வகுப்பிலும் 40 பேர் படிக்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது 60 முதல் 70 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் கடும் இடம் நெருக்கடி ஏற்பட்டு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பள்ளியினுள் பெரும்பாலான மாணவர்கள் இருக்கையிலும், இடம் பற்றாக்குறை காரணமாக தரையிலும் அமர்ந்து கல்வி கற்றுக்கொள்வதால் மாணவர்கள் இடையே பெரும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துகிறது.

மேலும், விளையாட்டு மைதானம் மற்றும் ஆய்வக வசதியும் இல்லாமல் அப்பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் இங்கு அரசு பள்ளியில் போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அரசு உடனடியாக இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படிக்க: இரு நீதிபதிகளின் மாறு பட்ட தீர்ப்பு... மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை!