நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்...! அமைச்சர் மெய்யநாதன்...!!

 நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்...! அமைச்சர் மெய்யநாதன்...!!

தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் பேசிய அவர், பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் அறிவுறுத்தலின் அடிப்படையில் 2 கோடி 82 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். மேலும் பசுமை சைதை திட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சைதாப்பேட்டை பகுதியை பசுமையாக மாற்றி இருப்பதாகவும், பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியும் கூட பசுமை பள்ளிகளை உருவாக்கி தந்து வருகிறார் என்றும் கூறினார்.

மேலும், உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 70 லட்சம் மரங்களுக்கு  275 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதே போன்று உணவுத் துறை அமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பனை விதைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர்,  பூமிக்கு மனதார மரங்களை தானமாக கொடுங்கள் என்று அறிவுறுத்தினார். 

தொடர்ந்து,நமெக்கெல்லாம் மூத்த மொழியான தமிழை சிறப்பிக்கும் வகையில் முத்தாய்ப்பாக நிலவில் இருந்து பார்த்தாலும்  தமிழ்நாட்டில் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் சட்டசபையில் அறிவித்துள்ளார்.