"கள்ளச்சாராய விற்பனையை அரசு தடுக்க வேண்டும்" கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

"கள்ளச்சாராய விற்பனையை அரசு தடுக்க வேண்டும்" கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

கள்ளச்சாராய விற்பனையை தடுத்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 16 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 13 பேருக்கு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல்நிலைய ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு காவல்துறை பெண் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா,  உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஆகிய நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அரசிற்கு கோரிக்கை விடுத்து இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ. 10 லட்சம் அறிவித்துள்ளதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. தலா 50 ஆயிரமும், சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது ஆறுதலை தருவதாக கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில்  கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பது தொடர்பான குற்றங்கள் 1.49 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 11,828 பெண்கள் உட்பட 1,39,697 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ 1,77,99,900 மதிப்புள்ள சாராய ஊறல் ரூ. 2,07,20,760 மதிப்புடைய கள்ளச்சாராயம் ரூ. 31,21,700 மதிப்புடைய எரிசாராயம் கைப்பற்றியதாக அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் தமிழ்நாட்டில் இயங்கி வரும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் திறமையின்மையும், உள்ளூர் காவல்துறையினர் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கொண்டுள்ள கூட்டு உறவின் காரணமாக கள்ளச்சாராய விற்பனை தொடர்வதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினை செயல்திறன் மிக்கதாக மாற்றுவதுடன், கள்ளச்சாராய பேர்வழிகளோடு உறவு கொண்டுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:கர்நாடக முதலமைச்சா் யாா்? டெல்லி விரையும் தலைவர்கள்!