மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரின் துன்புறுத்தல் தாங்காமல் இளைஞர் தற்கொலை....இறப்பதற்கு முன்பு வீடியோ பதிவில் பரபரப்பு வாக்குமூலம்

சென்னையில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரின் துன்புறுத்தல் தாங்காமல் வீடியோ வாயிலாக தற்கொலை வாக்குமூலம் அளித்துவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரின் துன்புறுத்தல் தாங்காமல் இளைஞர் தற்கொலை....இறப்பதற்கு முன்பு  வீடியோ பதிவில் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை ஜாம்பஜார் முகமது ஹுசைன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் வித்திய குமார் (32). இவர் தி.மு.க 115 வது பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வித்திய குமாருக்கும் அவரது மனைவி நிஷாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த வித்திய குமார் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தொடர்பாக ஜாம்பஜார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடம் வந்த போலீசார் வித்திய குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வித்திய குமாரின் செல்போனில் அவரால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று கண்டறியப்பட்டது. அந்தப் பதிவில் வித்திய குமார் தனது மனைவி நிஷா, அவரின் சகோதரி உஷா மற்றும் உஷாவின் கணவர் கண்ணன் ஆகியோர் தன்னை பல வகைகளில் துன்புறுத்தி வருவதாகவும், கணவரென்றும் பாராமல் நிஷா தன்னை அடிப்பதாகவும், அவரின் சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரை தான் அவர்களால் பட்ட துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் தற்போது தற்கொலை முடிவை மேற்கொள்வதாகவும், தனது சாவிற்கு மனைவி நிஷா, உஷா மற்றும் கண்ணன் ஆகிய மூவரும்தான் முழு காரணம் எனவும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் அவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ஜாம்பஜார் போலீசார் வித்திய குமாரின் மனைவி நிஷா மற்றும் அவரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது மகன் மனைவியால் பட்ட வேதனை தாளாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அவர்கள் அளித்த போலி புகாரின் அடிப்படையில் தீர விசாரிக்காமல் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தனது மகனை அழைத்து மிரட்டியது தனது மகனின் வேதனையை மேலும் அதிகரித்துவிட்டதாகவும் தனது மகனின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வித்திய குமாரின் தந்தை மதன் தெரிவித்துள்ளார்.