ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்..! வைகோ...!!

ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்..! வைகோ...!!

"ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும்" என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் ரவியின் கருத்தை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று ஆளுநர் அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் ஆளுநர் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து ஆளுநர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள்"என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து  "ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள், நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்துவிட்டன. சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாகிவிடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்." என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

முன்னதாக,  "நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை ஸ்டெர்லைட் பூர்த்தி செய்ததாகவும், அதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டதாகவும்" ஆளுநர் ஆர்.என்.ரவி  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.