"அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!

"அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!

பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக வைகோ தெரிவித்துள்ளார். 

சேலம், சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சர்கள் பணி தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யக் கோரி கோவில் அர்ச்சகர் முத்து சுப்பிரமணியன் என்பவர் 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், கோவிலில் பின்பற்றப்படும் ஆகமத்தின் அடிபடையிலேயே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். கோவில்களின் ஆகமத்தை காண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இக்குழு அறிக்கை அளிக்கும் வரை அர்ச்சகர்கள் நியமத்தை தள்ளி வைக்க வேண்டுமா? என்ற கேள்வி குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆகமத்தை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள குழு, தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் முன், குறிப்பிட்ட கோவிலின் ஆகமம் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்றால் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்களும், தக்கார்களும், அர்ச்சகர்களை நியமிக்க எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அர்ச்சகர் நியமனத்தில்  ஜாதியின் அடிப்படையிலான பரம்பரைக்கு எந்த பங்கும் இல்லை எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். சேலம் சுகவனேஸ்வரர் கோவிலின் ஆகமம் தெளிவாக்கப்பட்டுள்ளதால், அர்ச்சகர் நியமன நடைமுறையை மேற்கொள்ளலாம் எனவும், தேர்வு நடைமுறையில் மனுதாரரும் பங்கேற்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், "தந்தை பெரியார் அவர்களின் இறுதி கோரிக்கையான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அரசு செயல் வடிவம் கொடுத்தது. நீதிமன்ற குறுக்கீடுகள் காரணமாக அந்த முயற்சிக்கு இடையூறு வந்தது. அதன்பின்னர் திராவிட மாடல் அரசு நடத்தும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு மீண்டும் அர்ச்சகர் சட்டத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்

மேலும், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டத்தக்க இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளதாக கூறியுள்ள அவர், அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் படித்து, அரசு நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி இல்லாமல் வேதனையோடு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்ற அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை உடனடியாக பணியில் நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க:"இன்றைக்கு அஷ்டமி, நாளை நவமி" தலைவரை அறிவிக்க பஞ்சாங்கம் பார்த்த காங்கிரஸ்!