தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்..! உயிர் தப்ப கத்தியை பிடுங்கி கணவனையே வெட்டி சாய்த்த மனைவி!!
தன்னை கத்தியால் வெட்டிய கணவரிடமிருந்து கத்தியை பிடுங்கி அவரையே வெட்டி கொன்ற மனைவியை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் - கோமதி தம்பதி. லாரி செட்டில் வேலை பார்த்து வந்த குமரவேல் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் மனைவி கோமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதை கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் குமரவேல் குடித்துவிட்டு தினந்தோறும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் குமரவேல் குடித்துவிட்டு போதையில் கோமதியிடம் தகராறில் இறங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கணவன் மனைவி சண்டை முற்றவே, ஆத்திரத்தில் குமரவேல் கத்தியால் கோமதியை வெட்டியுள்ளார். இதில் முகம், நெற்றி என பல இடங்களில் வெட்டுக்காயம் வாங்கிய கோமதி தன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக குமரவேலுவிடமிருந்து கத்தியை பிடுங்கி தன் கணவன் என்றும் பாராமல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த குமரவேல் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரவேலுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே வெட்டுக்காயத்தால் படுகாயமடைந்த கோமதியை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.