கணவரை உயிருடன் புதைத்த மனைவி...

ஜீவ சமாதி ஆகவேண்டும் என்ற கணவனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக உயிருடன் கணவனை, மனைவி புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை உயிருடன் புதைத்த மனைவி...

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.  இவரது மனைவி லட்சுமி, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  30 வயதான மகன் ராஜேஸ்வரன் துபாயில் பணிபுரிகிறார்.  25 வயதான மகள் தமிழரசி தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 17-ம் தேதி இரவு நாகராஜ் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உயிரிழக்க போவதாகவும், அதனால் தன்னை கொல்லைப்புறத்தில் உள்ள குழியில் புதைத்து விடுமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. கணவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மனைவி லட்சுமியும் அவ்வாறே செய்துள்ளார்.

அன்று இரவு பணிக்கு சென்றிருந்த தமிழரசி, அடுத்த நாள் (18-ம் தேதி) வீட்டிறுகு வந்ததும், தந்தை குறித்து தாயிடம்  கேட்டபோது வெளியில் சென்றதாக கூறியுள்ளார். இரண்டு நாள் கழித்து மீண்டும் தாயிடம் வெளியில் சென்ற தந்தை குறித்து கேட்டதாக தெரிகிறது.  

அப்போது அவர், தந்தை தன்னிடம் சத்தியம் வாங்கி கொண்டு, அவர் தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் படுத்துக்கொண்டு என்னை மன் போட்டு மூட சொன்னார். அவர் சொன்னபடியே நானும் செய்துவிட்டேன் என்று கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மகள், இச்சம்பவம் குறித்து உடனே பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த பெரும்பாக்கம் ஆய்வாளர் சக போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் லட்சுமியை கைது செய்த போலீசார், நாகராஜ் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


உடற்கூறு பரிசோதனை தகவல் வந்த பின்னரே முழுமையான தகவல் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.