ரயில் படிக்கட்டில் அமர்வதில் பிரச்சனை... தவறி விழுந்த இருவர்!!

ரயில் படிக்கட்டில் அமர்வதில் பிரச்சனை... தவறி விழுந்த இருவர்!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படிக்கட்டில் அமர்வது தொடர்பாக குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் தவறி விழுந்து உயிரிழந்தனா். 

நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் விரைவு ரயிலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் 32 பயணம் செய்துள்ளார். அதே ரயிலில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஈரோடு செல்வதற்காக பயணம் செய்துள்ளார். 

ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் முத்துக்குமார், மாரியப்பன் இருவருக்கும் படிக்கட்டில் அமர்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் மது போதையில் இருந்த காரணத்தால் வாக்குவாதம் முற்றி கை கலப்பாகியுள்ளது. 

ரயில் சாத்தூர் அருகே ஆர் ஆர் நகர் பகுதி வந்த பொழுது, இருவரும் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சக பயணிகள் ரயில் செயினை இழுத்து நிறுத்தி உள்ளனர். தவறி கீழே விழுந்ததில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

காயமடைந்த மாரியப்பன் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தூத்துக்குடி சரக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க || சொகுசு கார்களில் குட்கா கடத்தி வந்த 2 வட மாநில இளைஞர்கள் கைது!