தஞ்சை தேர் விபத்து தொடர்பான அரசின் ஒரு நபர் விசாரணைக் குழு தொடங்கியது
தஞ்சை களிமேடு தேர் விபத்து தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் குழு விசாரணை தொடங்கியது.
தஞ்சை களிமேட்டில் சப்பரத் தேர் மின்கம்பியில் உரசி ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சப்பர விபத்து தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் குழுவை அரசு நியமித்தது.
இதையடுத்து தஞ்சை வந்த முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் விசாரணையை தொடங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விசாரணையில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா, மின்துறை, நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மருத்துவர்கள் குழு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
விபத்து குறித்த தகவல்களை துறைவாரியாக அதிகாரிகளிடம் முதன்மைச் செயலாளர் கேட்டறிந்தார். தொடர்ந்து களிமேடு செல்லும் அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். விழாக்குழுவினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.