ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் கருத்து ஒற்றுமை வேண்டும் - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழ்நாடு முதலமைச்சரும் ஆளுநரும்  பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வேண்டுமே தவிர மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். 

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர், லடாக் உதயநாள் விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுடன் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இதையும் படிக்க : நவம்பர் 3-இல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்... !

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்ற போது மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்தது, அதை நான் உடனே எடுக்க சொன்னேன். பின்னர், ஒரு அடுக்கு பாதுகாப்பு இருந்து வந்த நிலையில் தற்போது அதையும் அகற்ற சொல்லிவிட்டேன். ஆனால், எதிர்க்கட்சியினர் பேரிகேடுகளை எடுக்க வேண்டும் எனக்கூறி வந்ததால், தற்போது அதையும் அகற்றிவிட்டதாக கூறியவர், பேரிக்காடுகள் இல்லை என்பதற்காக பெட்ரோல்  குண்டு வீசி விடாதீர்கள் என நகைச்சுவையாக கூறினார். 

தொடர்ந்து பேசியவர், எப்போதும் கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது  மாநிலத்தில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று கூறியவர், புதுச்சேரியில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் கருத்து ஒற்றுமை உள்ளதாக கூறினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சரும் ஆளுநரும்  பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வேண்டுமே தவிர மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.