"அத்திக்கடவு -அவிநாசி திட்டம்" விரைவில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!
அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் இன்னும் 15 நாட்களுக்குள் முக்கிய பணிகள் நிறைவடையும் என்பதால் விரைவில் திட்டத்தை முதலமைச்சர் திறப்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சு. முத்துசாமி, அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனத்தினர் பணிகளை வேகமாக செய்துகொண்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும் இப்பணிகளில் தொய்வு ஏற்படுகின்ற காரணத்தால் வேலை ஆட்களை அதிகப்படுத்தி பணிகளை மேலும் வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இப்பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.
மேலும், இன்னும் 15 நாட்களுக்குள் 1045 குளங்களில், 800 குளங்களின் பணிகள் நிறைவடைந்து, குளங்கள் நிரப்பப்பட்டும் என தெரிவித்த அவர் மிக விரைவாக தமிழக முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, கீழ் பவானி பாசன வாய்க்காலில், சீரமைப்பு பணிகள் குறித்த பிரச்சனையில் விவசாயிகள் இரு தரப்பாக இருக்கின்றனர் எனக் கூறிய அவர் இந்த இரு தரப்பினருக்கும் இடையே உள்ள தகராறு தீர்க்க வேண்டும் என்பது அரசின் கடமை என கூறியுள்ளார். இந்த இரு தரப்பினரின் பிரச்சினை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறி விட கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் எனவே எந்த வகையான மைய புள்ளியில் இவர்கள் ஒன்றிணைவார்கள் என பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இரு தரப்பினரும் ஒற்றுமையாக வரவேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் கீழ்பவானி பாசன விவசாயிகள் இரு தரப்பினரும் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:'4 ஊராட்சி மன்ற தலைவர்கள் கைது' சீர்காழியில் பரபரப்பு...!