தமிழ் மேடைகளில் ஓங்கி ஒலித்த குரல்...இன்று மூச்சை நிறுத்திவிட்டது..!
தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் வயது மூப்பால் காலமானார்.
யார் இந்த நெல்லை கண்ணன்:
திருநெல்வேலியில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நெல்லை கண்ணன். இவர் ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பேச்சாளராக விளங்கினார். அதன்பின் இலக்கிய மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளராகவும் விளங்கினார். அதோடு சிறந்த பேச்சாளராகவும் பட்டிமன்ற நடுவராகவும் அறியப்பட்ட இவர், ’தமிழ் கடல்’ என அழைக்கப்பட்டார். தமிழ் மேடைகளில் இவரது குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அரசியல் ரீதியாகவும் பல்வேறு கட்சி தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர்:
1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.
ஊர் ஊராக பிரச்சாரம்:
இதனைத்தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆதரவோடு கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக ஊர்ஊராக பிரசாரம் மேற்கொண்டார்.
விருது:
சமீபத்தில் ‘தமிழ்க் கடல்’ நெல்லை கண்ணனின் தமிழ் ஆற்றலை பாராட்டி தமிழக அரசு அவருக்கு இளங்கோவடிகள் விருது வழங்கி கெளரவித்திருந்தது.
இன்று காலமானார்:
இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்த அவர், வயது மூப்பு (77) மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது வீட்டிலேயே உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
இரங்கல்கள்:
சிறந்த பேச்சாளராகவும், பட்டிமன்ற நடுவராகவும் கருதப்பட்ட நெல்லை கண்ணன் மறைவுக்கு, பல்வேறு தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.