சாலை பணிகள்: "ஒரு மரத்தை வெட்டினாலும் போராடுவோம்" -சௌமியா அன்புமணி!

சாலை பணிகள்: "ஒரு மரத்தை வெட்டினாலும் போராடுவோம்" -சௌமியா அன்புமணி!

சாலை பணிகள் ஒரு மரத்தை வெட்டினாலும் போராடுவோம் என சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

திருமங்கலத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகத்தின் முக்கிய நிர்வாகியுமான சௌமியா அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில், பசுமைத்தாயகம் நாளான ஜூலை 25ஆம் தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்க வேண்டும் என்பது பசுமைத்தாயகம் நிறுவனத்தின் தலைவர் விருப்பத்திற்கு இணங்க இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் ஒரு நிகழ்ச்சியாக இன்று மதுரை திருமங்கலத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து காலநிலை, அவசரநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அதை எப்படி ஆவணம் செய்வது, பின்னர் அதை எப்படி ஐக்கிய நாடுகள் அவையில் சமர்ப்பிப்பது போன்ற விஷயங்களை பேசவிருக்கிறோம் என தெரிவித்தார்.

மகளிர் உதவித் தொகை பெற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது அரசாங்கத்தின் முடிவு. நிர்வாக காரணங்களால் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதை சட்டரீதியாக நாம் பின்பற்ற வேண்டும் என பதிலளித்தார்.

நெடுஞ்சாலைத்துறை வேலையின் போது மரங்கள் வெட்டப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், சென்னையில் ரயில் நிலையத்தில் மரத்தை வெட்டும்போது பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறோம். அதற்கு அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள், ஒரு மரம் வெட்டும்போது அதற்கு இணையாக 10, 20 அல்லது 100 மடங்கள் கூட நடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு மரத்தை எடுத்தாலும் பசுமைத் தாயகம் இன்று போராட்டம் செய்யும். செங்கல்பட்டில் ஒரு இடத்தில் பெரிய ஆலமரத்தை எடுத்ததற்கு, அதை வேறு ஒரு இடத்தில் நடப்பட்டு அதற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறோம் என தெரிவித்தார். 

இதையும் படிக்க:பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா -அண்ணாமலை திடீர் சந்திப்பு!